Breaking News

மகிந்தவின் திட்டத்தோடு களம் இறங்கினார் வித்தியாதரன் !

முன்னாள் ஊடகவியலாளரும் உதயன் மற்றும் சுடரொளி
பத்திரிகையின் பிரதம ஆசிரியராகவுமிருந்த ந.வித்தியாதரன் அவர்கள் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சேவின் திட்டத்தோடு களத்தில் இயங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மூத்த ஊடகவியலாளரும் மலரும் இணையத்தள இயக்குனருமான என்.வித்தியாதரன் கூட்டமைப்பின் பலத்தினை திட்டமிட்டு சிதைக்கும் திட்டத்தோடு தனது நகர்வுகளை ஆரம்பித்துள்ளதாக நம்பகரமாக கொழும்பிலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தமிழ்ப் பத்திரிகை உலகில் 2009காலப்பகுதி வரை தமிழ்த்தேசியம் தொடர்பில் தனது எழுத்து மூலம் தமிழர்கள் மனதில் இடம் பிடித்திருந்த மூத்த ஊடகவியலாளரான என்.வித்தியாதரன் விடுதலைப்புலிகளின் காலத்திலும் தமிழ்த்தேசியம் தொடர்பிலும் இனவிடுதலை தொடர்பிலும் காத்திரமான பங்களிப்பை ஆற்றியிருந்தார். 

போர் மௌனிக்கப்பட்ட பின்னரும் வடமாகாணத்துக்காக முதலமைச்சர் வேட்பாளர் தெரிவிலும் அதற்கான தகுதி தனக்கு இருப்பதாக தெரிவித்து சில நேர்காணல்களையும் அவர் வழங்கியிருந்தார். சி.வி.விக்கினேஸ்வரனைவிட தகுதியும் ஆளுமையும் தனக்கிருப்பதாக அப்போதைய காலப்பகுதியில் தெரிவித்திருந்தார். இருந்தும் தமிழரசு கட்சி மேலிடத்தில் அவருக்குரிய சாதகமான பதில் கிடைக்காத நிலையில் தொடர்ந்து பத்திரிகைத் துறையிலேயே பணியாற்றி வந்தார். 

இவ்வாறாக அரசியலில் களம் கிடைக்காத வித்தியாதரன் முன்னாள் போராளிகளை அரசியலில் ஈடுபடுத்தி கூட்டமைப்பை பலவீனப்படுத்தும் நோக்கில் கடந்த சில மாதங்களிற்கு முன்னர் இவரால் ஆரம்பிக்கப்பட்ட திட்டம் தற்போது இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது.

முதலில் காணாமல் போன உறவுகளை சந்தித்து கலந்துரையாடி அதற்கூடாக ஒரு ஆதரவுத் தளத்தை ஏற்படுத்த அவர் எடுத்த முயற்சி 50பேர் என்ற வட்டத்தை தாண்டி செல்லாத நிலையில் அதனை கைவிட்டு யாழில் தரிசனம் என்ற பத்திரிகை ஒன்றை ஆரம்பிக்கும் திட்டத்தை சிங்கள புலனாய்வாளர்களின் ஒத்துழைப்போடு மேற்கொண்டிருந்தார்.


இவரின் முதல் முயற்சிகள் கைகூடாத நிலையில் 12000 புனர்வாழ்வுபெற்ற போராளிகளிகளை பகடைக்காய்களாக பயன்படுத்தி அரசியலில் இறங்கினால் தான் ஒரு ஆசனத்தையாவது பெற்றுவிட முடியும் என எண்ணும் அதேநேரம் மகிந்த தனது திட்டத்தை நிறைவேற்ற இவரை பகடைக்காயாக பயன்படுத்துகின்றார். 

இவரால் ஆரம்பிக்கப்பட்ட இந்த திட்டத்திற்கு உண்மையிலேயே புனர்வாழ்வுபெற்ற முன்னணி போராளித் தலைவர்களோ, அரசியல் துறை முன்னணிச் செயற்பட்டாளர்களோ தெரிவுசெய்யப்படாமல் மகிந்தவின் ஆட்சியின்போது புனர்வாழ்வு நிலையங்களில் புனர்வாழ்வு திட்ட காலத்தில் சிறிலங்கா புலனாய்வு வேலைக்காக கட்டாயமாக பயிற்றுவிக்கப்பட்ட சிலர் முன்னணியில் செயற்பட்டுவருவதாகவும் இவர்கள் மகிந்த ராஜபக்சே காலத்திலேயே இவருடன் இணைக்கப்பட்டவர்கள் எனவும் அறியவருகிறது.

இது தற்போதைய மைத்திரி அரசில் ஆரம்பிக்கப்பட்ட திட்டமல்ல. போராளிகளைப்பற்றி கதைப்பவர்களே கைதுசெய்யப்பட்ட காலத்தில் எப்படி புலிகளைவைத்தே கட்சி ஆரம்பிக்கும் திட்டத்தை இவரால் முன்னெடுக்க முடியும்?

புனர்வாழ்வு பெற்ற போராளிகள் அனைவருமே அந்தந்த பகுதி இராணுவ சிவில் மையத்திற்கு அவ்வப்போது அழைக்கப்படுவதும் சிலரை அதற்காக வைத்து கண்காணித்து வருகின்ற நிலைமை இருக்கும்போது மகிந்தவின் மேல்மட்ட அனுமதியில்லாமல் இவரால் ஒருவரையேனும் உள்வாங்கமுடியுமா என பல போராளிகள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் இரு முன்னாள் போராளிகளோடு கடந்தவாரம் மகிந்த ராஜபக்சேவுடன் கொழும்பில் இரகசிய கலந்துரையாடல் ஒன்றினையும் இவர் நடத்தியிருக்கின்றார். அந்த சந்திப்பில் அடுத்த கட்ட நகர்வு எப்படி அமையவேண்டும் என்பது தொடர்பில் மகிந்தவால் அன்பு கட்டளைகள் இவருக்கு வழங்கப்பட்டதாகவும் அறியவருகிறது. 

அதன்படி முதல்கட்டமாக மாவட்டரீதியில் சிலபோராளிகளை உள்வாங்கிகொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடு பேரம்பேசுவது என்றும் அவர்கள் அதற்கு நிச்சயம் வாய்ப்பு வழங்கமாட்டார்கள் என்றும் அதனை சாட்டாக வைத்து கூட்டமைப்புக்கு எதிராக பேரினவாதத்திற்கு ஆதரவளிக்கும் கட்சிகளுடனோ அல்லது தனிக்கட்சியாக போட்டியிடும்படியும் மகிந்த தரப்பால் அறிவுறுத்தப்பட்டிருப்பதாகவும் அறியமுடிகின்றது.

மகிந்த-வித்தியாதரன் தீட்டிய திட்டங்கள் என்ன ?

1. கூட்டமைப்பின் வாக்கு பலத்தினை குறைப்பது

நேரடியாக கூட்டமைப்பில் இடம் கேட்டால் அவர்கள் வழங்க மாட்டார்கள் என்றும் அதனை சாட்டாக வைத்து போராளிகளை தனியே களத்தில் இறக்குவதன்மூலம் கூட்டமைப்பின் வாக்கு வீதத்தை சிதறடிப்பதனூடாக அவர்களுக்கு கிடைக்கும் ஆசனத்தை குறைப்பது. 

2. புலிப் பயங்கரவாதம்  மீண்டும் தோற்றம் பெறுவதாக தெற்கில் பிரச்சாரப்படுத்துவது

முன்னாள் புலிகள் தேர்தலில் நின்றால் தென்பகுதியில் மீண்டும் புலிகள் வந்துவிட்டார்கள் என்று மகிந்த தனது பிரச்சார திட்டத்தை நகர்த்துவதன் ஊடாக பௌத்த பேரினவாத வாக்கு வங்கியை கடந்த தேர்தலைவிட அதிகரிப்பது.

3.உரிமைப் போராட்டத்தை மழுங்கடிப்பது

அறியப்படாத விடுதலைப்புலிகளின் முன்னணி செயற்பாட்டாளர்கள் அற்ற ஒரு குழு களமிறங்குவதால் அவர்கள் தேர்தலில் தோல்வி நிச்சயம் என்பதால் அதனை சாட்டாக வைத்து தேர்தலின் பின்னர் புலிகளின் கொள்ளையை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்று இலங்கை அரசாலும் கூட்டமைப்பின் புலி எதிர்பாளர்களான சம்பந்தன்,சுமந்திரனின் பிரச்சார உத்திக்கும் வழிவகுக்கும் என்பதால் அதனை சாட்டாக வைத்து ஒரு அரைகுறை தீர்வை தமிழ் மக்கள் மத்தியில் திணிப்பது.

4. தனிநாடு கேட்ட விடுதலைப்போராளிகளையே சிங்கள பேரினவாதிகளின் யாப்பிற்கமைய ஒரே நாட்டுக்குள் தீர்வு என்ற வரையறைக்குள் போட்டியிட வைத்து தேசிய உரிமைப்போராட்டத்தை ஒற்றையாட்சிக்குள் முடக்குவதும் ஆகும்

இவ்வாறான திட்டங்களோடு களமிறங்கியிருக்கும் மகிந்த-விக்கி கூட்டணியின் திட்டத்தை புரிந்துகொள்ளாத சில முன்னாள் போராளிகளும் இவர்களின் திட்டத்தை புரிந்துகொள்ளாமலிருப்பதாக வித்தியாதரனோடு இருந்து அவரது செயற்பாடுகளை கண்காணித்துவரும் போராளியொருவர் கவலையோடு கருத்து தெரிவித்தார்.

இன்றைய மாற்றத்திற்கான மைத்திரி அரசில்கூட மாற்றங்கள் ஏற்பட்டதாக தெரியவில்லை. அண்மையில் அரச நியமனம் பெற்ற 2வருடம் கடமையாற்றிய கிராம சேவகர்கள் கூட அண்மையில் புனர்வாழ்வுக்காக அனுப்பப்பட்டிருக்கிறார்கள் என்று அறிக்கை வெளியிடும் அரசின் பங்காளியான த.தே.கூட்டமைப்பு கூட அதனை தடுத்துநிறுத்தமுடியாத நிலையிலேயே இருக்கின்ற நிலையில் முன்னாள் போராளிகள் எவ்வாறு சுதந்திரமாக பொதுவெளியில் இறங்கமுடியும்?

அண்மையில் தியாக தீபம் திலீபன் உண்ணா நோன்பிருந்து உயிர்நீர்த்த அதே நல்லூர் திடலில் போராளிகளை வைத்து வேள்வி நடத்தியதாக வித்தியாதரனால் அறிக்கை வெளியிடப்பட்டது.

அதன் விபரம் தொடர்பாக கேட்ட பி.பி.சி செய்தியாளரிடம் கருத்து தெரிவித்த வித்தியாதரன் பலநூறுபேர் கலந்துகொண்டதாக கூறியபோதும் இரண்டிலக்க எண்ணிக்கையானோரே கலந்துகொண்டிருக்கின்றனர்.

அத்தோடு கலந்து கொண்டவர்களின் புகைப்படங்களையே வெளியிடமுடியாத நிலையிலிருக்கும்போது வித்தியாதரனால் எப்படி இவர்களை தேர்தலில் களமிறக்கமுடியும் என்பதையும் நாம் கருத்தில்கொள்ள வேண்டும்.

இது தொடர்பான செய்திகளை அனைத்து தேசிய ஊடகங்களும் அடக்கி வாசித்தவரும் நிலையில் விரிவான பார்வை ஒன்றை விரைவில் வெளியிடுவோம் என்பதனை வாசகர்களுக்கு அறியத்தருகின்றோம்.

அத்தோடு இறுதிப்போர் மௌனிக்கப்பட்டபின் வித்தியாதரனின் செயற்பாடுகள் எந்த வகையில் அமைந்திருந்தது என்பதனை கடந்த ஆண்டு இறுதியிலும் எமது ஆசிரியபீடம் சுட்டிக்காட்டியிருந்தது அதனையும் வாசகர்களின் தெளிவிற்காக கீழே இணைக்கின்றோம்

ஊடகவியலாளர் வித்தியாதரன் மகிந்தவுக்கு ஆதரவு? 

வித்தியாதரனின் புதிய அரசியல் கட்சி எதற்காக ? (காணொளி இணைப்பு)


மூத்த ஊடகவியலாளரும் மலரும்இணையத்தள இயக்குனருமான என்.வித்தியாதரன் மகிந்தவுக்கு மறைமுக ஆதரவளிப்பதற்கு சம்மதித்திருப்பதாக கொழும்பிலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்ப் பத்திரிகை உலகில் இதுவரை காலமும் தமிழ்த்தேசியம் தொடர்பில் தனது எழுத்து மூலம் தமிழர்கள் மனதில் இடம் பிடித்திருந்த மூத்த ஊடகவியலாளரான என்.வித்தியாதரன் விடுதலைப்புலிகளின் காலத்திலும் தமிழ்த்தேசியம் தொடர்பிலும் இனவிடுதலை தொடர்பிலும் காத்திரமான பங்களிப்பை ஆற்றியிருந்தார். 

போர் மௌனிக்கப்பட்ட பின்னரும் வடமாகாணத்துக்காக முதலமைச்சர் வேட்பாளர் தெரிவிலும் அதற்கான தகுதி தனக்கு இருப்பதாக தெரிவித்து சில நேர்காணல்களையும் அவர் வழங்கியிருந்தார். இருந்தும் தமிழரசு கட்சி மேலிடத்தில் அவருக்குரிய சாதகமான பதில் கிடைக்காத நிலையில் தொடர்ந்து பத்திரிகைத் துறையிலேயே பணியாற்றி வந்தார்.

சமாதான காலத்தில் மகிந்த சில தகவல்களை இந்த வித்தியாதரன் ஊடாகவே வன்னிக்கு அனுப்பி வந்ததாகவும் சில செய்திகள் முன்னர் வெளியாகியிருந்தது. 

தற்போது மகிந்தவை விட்டு ஒவ்வொருத்தராக வெளியேறிவரும் நிலையில் தமிழர் தரப்பின் ஒருவரையாவது தனது பக்கம் அழைக்கும் மகிந்தவின் திட்டத்திற்கு வித்தியாதரன் நேரடியாக நாடியதாகவும் அதற்கு வித்தியாதரன் ஆதரவளிக்க முடியாது என்றும் தன்னாலான மறைமுக ஆதரவை வழங்குவதற்கு இணங்கியிருப்பதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளது.

இதுவரைகாலமும் தனது எழுத்து மூலம் தமிழ்த்தேசியத்தை பரப்பி வந்த வித்தியாதரன் தற்போது அரசியல் தொடர்பில் தமிழ் மக்களின் நிலைப்பாடு தொடர்பிலோ அவர்கள் எடுக்கவேண்டிய முடிவு தொடர்பிலோ எந்தவிதமான கருத்துக்களையும் வெளியிடுவதை தவிர்த்து வருகின்றார். அவரது இணையத்தளத்திலும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் எந்த கருத்தையோ கட்டுரையினையோ அவர் இதுவரை வெளியிடவில்லை என்பதும் நோக்கத்தக்கது.

அத்தோடு தனது இணையத்தளம் மூலமாக மகிந்தவின் தேர்தல்கால வாசகமான ‘‘வெற்றியின் சின்னமே வெற்றிலைச் சின்னம்‘‘ என்ன வாசகத்துடனான விளம்பரத்தினையும் தனது இணையத்தில் தொடர்ந்தும் பரப்பி வருகின்றார். காசுக்கான விளம்பரமாக வித்தியாதரனால் காரணம் கற்பிக்கப்படலாம் இருந்தும் இதுவரைகாலமும் வித்தியாதரனுடன் நன்கு பழகிய காரணத்தை காட்டும் அவரது உறவு நண்பர் காசுக்காக  தேசியத்தை விலைபேசும் வேலைகளுக்கு அவர் அடிமையானதில்லை என்றும் எதற்காக இந்த வித்தியாதரன் இவ்வாறான வேலைக்கு இணங்கினார் என்றும் கேள்வி எழுப்புகின்றார்கள்.

அண்மையில் இவரால் வெளியிடப்பட்ட ஓர் நூலான ‘எழுத்தாயுதம்‘‘ என்ற நூல் வெளியீட்டிலும் த.தே.கூட்டமைப்பு தலைவர் சம்பந்தன், எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கே ஆகியோரை அழைத்திருந்தபோதும் ஈ.பி.டி.பி உறுப்பினரான தவராசாவினையே வாழ்த்துரைக்காக முதலாவதாக அழைத்திருந்தார் என்பதையும் இங்கு சுட்டிக்காட்டலாம்.


கடந்த காலங்களில் உதயன் சுடரொளி பத்திரிகை மீதான பல தாக்குதல் சூத்திரதாரிகளாக அப்போதைய காலங்களில் வித்தியாதரனாலும் சரவணபவனாலும் சுட்டிக்காட்டப்பட்ட அதே ஈ.பி.டி.பி உறுப்பினரையே வாழ்துவதற்கு அழைத்திருக்கிறார் வித்தியாதரன் என்பதோடு மகிந்தவின் கட்டளைக்கிணங்க தேசியம் தொடர்பிலோ தமிழர்களின் எதிர்கால அரசியல் நகர்வு தொடர்பிலோ அடக்கி வாசிப்பதையும் காணலாம்.